கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வெய்யலூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பெண் விவசாயி கயல்விழி என்பவர் தனக்கு சொந்தமான குறைந்த இடத்தில் சாமந்திப்பூ பயிரிட்டு
கை நிறைய வருமானமும், நிறைவான வாழ்வாதாரமும் பெற்று வாழ்ந்து வருகிறார். சாலையோரம் அமைந்துள்ள இவரது வயலில் மலர்ந்து உள்ள சாமந்தி பூக்களை பார்க்கும் யாருமே நின்று நிதானித்து ஒரு செல்பி எடுத்துச் செல்வது வாடிக்கையாக இருக்கிறது. வழக்கமாக இப்பகுதிகளில் நெல், கரும்பை முக்கியப் பயிராக விவசாயிகள் செய்து வருகின்றனர். இருந்தாலும் அவற்றில் போதுமான வருமானம் என்பது எப்போதும் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் அவற்றில் விவசாயிகள் திண்டாடி வரும் நிலையில் கயல்விழி தனக்கு சொந்தமான குறைந்த அளவு உள்ள இடத்தில் ஏற்கெனவே பல்வேறு பயிர்களை செய்து பார்த்து எவ்விதமான வருமானமும் இல்லாததால் சோர்ந்து போனவர்,ஏதாவது செய்து நாமும் விவசாயத்தில் ஒரு நிறைவான வருமானம் பெற வேண்டும் என்று நினைத்தார். அதன்படி நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மூன்று மாதமேயான
சாமந்திப் பூ செடிகளை ஓசூரிலிருந்து வாங்கிவந்து பயிரிட்டு பராமரித்து தற்போது அவை நன்றாக செழித்து வளர்ந்து அறுவடை செய்யப்பட்டு வருகிறது. எதிலும் போராட்டம் இல்லாமல் வெற்றி இல்லை என்று கூறும் பெண் விவசாயி கயல்விழி சற்று மாறுபட்டு பூக்கள் பயிர் செய்து வருவது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது
இவர் அறுவடை செய்து வரும் பூக்கள் மொத்த வியாபாரிகளிடம் கொடுக்கப்பட்டு உடனடியாக பணமும் தரப்படுகிறது. அதனால் கை நிறைய வருமானம் இருக்கிறது. குடும்பத்தில் அமைதியும் நிலவுகிறது என மகிழ்ச்சியாக தெரிவிக்கிறார். பெண்கள் படித்திருந்தால், வேலை பார்த்து தான் சம்பாதிக்க முடியும் என்பதை விட அனைத்து பகுதிகளிலும் இருக்கும் பெண்களும் தங்களாலும் முடியும் என்று நினைத்தால்விவசாயத்திலும் ஜெயிக்கலாம் என்று தெரிவிக்கிறார்.
வழக்கமாக பெண்கள் வீடுகளில் குடும்ப வேலைகளை செய்துவிட்டு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் கூட இது போன்ற விவசாய பணிகளில் செய்தால் வருமானம் என்பது நிறையவே இருக்கிறது. நாம் யார்கிட்டேயும் எதிர்பார்த்து காத்திருக்க வேண்டியதில்லை. தற்போது இவர் தனது அனுபவத்தின் மூலமே பூக்கள் சாகுபடி செய்து வருவதாகவும்,தனது அனுபவத்தை தன்னிடம் ஆர்வத்தோடு வரும் பெண்களுக்கு தெரிவித்து வருவதாகவும், அவர்களும் அதனை முயற்சித்துப் பார்ப்பதாகவும் குறிப்பிடுகிறார். அதனால் வழக்கமான விவசாய முறையில் செய்வதை விட கொஞ்சம் மாறுபட்டு விவசாயம் செய்ய முயற்சித்தால்
மண்ணும் வளம்பெறும், நாமும் நலம் பெறுவோம் என மகிழ்ச்சியோடு சாமந்திப்பூ விவசாயி கயல்விழி மன மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறார்..
No comments:
Post a Comment