தமிழர்கள் பண்டிகையான பொங்கலுக்கு இனிப்பான கரும்பை விளைவித்துக் கொடுக்கும் விவசாயிகளின் வாழ்க்கை இனிக்கிறதா?
தமிழகத்தில் தமிழர் பாரம்பரிய பொங்கல் பண்டிகைக்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில் பண்டிகையின் முக்கியப் பொருளான பன்னீர்க் கரும்பு விளைவிக்கும் விவசாயிகள் தற்போது கண்ணீரை சுமந்து வருகின்றனர். அரசு எங்களை கண்திறந்து பார்க்க வேண்டும் என்பதேஅவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வெய்யலூர், வடப்பாக்கம், ஓடாக்கநல்லூர், வாழைக்கொல்லை, வெள்ளியக்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 500 ஏக்கருக்கு மேல் பன்னீர்க்கரும்பு பயிரிடப்பட்டு உள்ளது.
பாரம்பரியப்பயிராக இருந்து வரும் பன்னீர்க்கரும்பு தற்போது வரை வேளாண்மைத்துறை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என விவசாயிகள் குற்றச்சாட்டை கூறுகிறார்கள்.
பொங்கல்கரும்பு மிக இனிப்பானது என்றாலும் அதனை விளைவிக்கும் விவசாயிகள் எங்கள் வாழ்க்கை அவ்வளவாக இனிக்கவில்லை என்று சோகமாகக் கூறுகின்றனர்.
நிலத்தை சமப்படுத்தி விதைக் கரும்பு போடுவதிலிருந்து, களை எடுப்பது, சோலையை கழித்து விடுவது, பூச்சிகளிடமிருந்து பாதுகாப்பது கடுமையாக விலையேறினாலும் உரம் வைப்பது, இப்படி ஒரு பிள்ளையை கண்காணித்து வளர்ப்பது போல வளர்த்து வந்தாலும் மிச்சம் மீதியை பார்க்க முடியவில்லை. அதனாலேயே நிறைய விவசாயிகள் இந்த பன்னீர்க் கரும்புப் பயிரிடுவதை தவிர்த்து வருகின்றனர்.
தற்போது பன்னீர் கரும்புகளுக்கு கரும்பு ஒன்றுக்கு 50 ரூபாய் விலை வேண்டும். பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கு தரகர் இல்லாமல் நேரடியாக பன்னீர் கரும்புகளை கொள்முதல் செய்ய வேண்டும். இது போன்ற குறைந்தபட்ச கோரிக்கையையாவது அரசு பரிசீலிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள்.
செய்தியாளர்: வீ. சக்திவேல்



No comments:
Post a Comment