தமிழகத்தில் பால் விலைஉயர்வு, மின்கட்டணம் உயர்வு ,சொத்துவரி உயர்வு,சட்ட ஒழுங்கு சீர்கேடு மற்றும் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க அரசை கண்டித்து கடலூர் மாநகராட்சி பகுதிகளின் செயலாளர்களான மஞ்சக்குப்பத்தில் வெங்கட்ராமன், புதுப்பாளையம் வழக்கறிஞர் பாலகிருஷ்ணன், திருப்பாதிரிப்புலியூர் கெமிக்கல் மாதவன், முதுநகர் வ.கந்தன், துறைமுகம் தங்கவினோத் ராஜ் ஆகியோரின் ஏற்ப்பாட்டின் பேரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியதாவது,
பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து திமுக ஆட்சிக்கு வந்து இருக்கிறது. சொத்து வரி உயர்வு மக்களை வாட்டி வதைக்கிறது. வணிக வளாகங்களுக்கு நூறு சதவீத வரி உயர்த்தப்பட்டுள்ளது. நூல் விலை உயர்ந்து இருக்கின்றது. பால் விலை உயர்ந்திருக்கின்றது. பெட்ரோல், டீசல், கேஸ் விலை என அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்திருக்கின்றது. மக்களைப் பற்றி கவலைப்படாத , மக்கள் நலனில் சிறிதும் அக்கறையற்ற ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கின்றது.
பால் விலையும் நெய் விலையும். வெண்ணெய் விலையும் இந்த ஆட்சியில் சில நாட்களுக்கு முன் உயர்த்தப்பட்ட நிலையில் பால்வளத்துறை அமைச்சர் திருமணத்தில் பால் விலையை குறைத்து விட்டேன் என்று முதலமைச்சர் பேசுகிறார். அங்கு இருந்த மக்கள் இதனால் அதிர்ச்சி அடைந்துவிட்டனர் என்று ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. பால் விலை தமிழகத்தில் என்ன விற்கிறது என்று தெரியாத முதல் அமைச்சர் தமிழகத்தில் இருந்து கொண்டிருக்கின்றார்.
தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்று கூட தெரியாத நிலையில் தான் முதலமைச்சர் இருக்கின்றாரா என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு எழுந்துள்ளது. சிறுபான்மை மக்களின் பாதுகாவலன் திமுக என்று ஸ்டாலின் பேசுகிறார். உண்மையில் சிறுபான்மை மக்களை பாதுகாத்தது, பாதுகாப்பது அதிமுக அரசு தான். கிறிஸ்தவர்கள் புனித யாத்திரையாக ஜெருசலம் செல்வதற்கும், முஸ்லிம்கள் மெக்கா செல்வதற்கும் மானியம் கொடுத்தார்.
முஸ்லிம்களின் பண்டிகையான ரம்ஜானின் போது நோன்பு கஞ்சிக்காக 4000 மெட்ரிக் டன் அரிசி கொடுத்தது உலமாக்களுக்கு பென்ஷன், சைக்கிள் கொடுத்த அரசு. சிறுபான்மை மக்களின் பாதுகாவலராக அம்மாவும் எடப்பாடியாரும் திகழ்ந்தார்கள்.
தமிழ்நாட்டில் கல்வி கடன், நகை கடன், விவசாய கடன் ரத்து என்ற எந்த தேர்தல் வாக்குறுதியும் திமுக நிறைவேற்றவில்லை. எடப்பாடியார் ஆட்சி காலத்தில் வழங்கப்பட்ட 7.5% உள் ஒதுக்கீட்டால் இன்று 562 மாணவர்கள் செலவே இல்லாமல் மருத்துவ படிப்பு படிக்கின்றார்கள். இது எடப்பாடியாரின் சாதனை. இது போன்ற ஒரு சாதனையை ஸ்டாலின் அரசு கூறிக்கொள்ள முடியுமா. விவசாயிகளின், நெசவாளர்களின் நலன் இந்த ஆட்சியில் காக்கப்படவில்லை. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மிகவும் குறைவாக இருக்கின்றது.
இன்று தமிழகத்தில் பல கட்டிடங்களை இந்த அரசு திறந்து கொண்டிருக்கிறது. இது எல்லாம் எடப்பாடியாரின் ஆட்சிகாலத்தில் தொடங்கப்பட்ட திட்டம். அதையெல்லாம் இப்போது ஸ்டிக்கர் ஒட்டி ரிப்பன் வெட்டி திறந்து கொண்டிருக்கின்றார்கள். இவர்களாக இதுவரை எந்த புதிய திட்டமும் துவங்கி நிறைவேற்றவில்லை,
உழைக்கும் மகளிருக்கு இருசக்கர வாகனம் மானிய விலையில் வழங்கினோம். அந்தத் திட்டம் இப்போது இல்லை. அம்மா உணவகத்திற்கு மூடு விழா போட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஏழை, எளிய மக்களுக்காக தொடங்கப்பட்ட திட்டம் தான் அம்மா உணவகம் திட்டம். விலையில்லா கறவை மாடு, ஆடு, கோழி கூட எடப்பாடியார் ஆட்சியில் கொடுத்தோம். அரசு பள்ளி மாணவர்கள் லேப்டாப் சொந்தமாக விலை கொடுத்து வாங்க முடியுமா. அந்த லேப்டாப்பை விலை இல்லாமல் பள்ளி மாணவர்களுக்கு அதிமுக அரசு வழங்கியது.
அந்த திட்டத்தையும் மூடி மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாகிவிட்டது இந்த விடியா அரசு. அம்மா குடிநீர், உப்பு, சிமெண்ட், அம்மா மருந்தகம் என ஏழை எளிய மக்களுக்காக தொடங்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் இந்த அரசு நிறுத்தி இருக்கின்றது. ஏழை எளிய மக்கள் எங்கே போவார்கள். கழக ஆட்சி மக்களை கை தூக்கி விட்ட ஆட்சி. தமிழ்நாட்டில் இந்த விடியா ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கின்றது. கஞ்சா பட்டி தொட்டி எங்கும் விற்கப்படுகின்றது.
மேலும் பல புதிய திட்டங்களையும் சேர்த்து நிறைவேற்றலாம். ஆனால் கழக ஆட்சியின் மக்கள் நலத் திட்டங்களை இந்த ஆட்சி முட்டுக்கட்டை போட்டு நிறுத்தி இருக்கின்றது. இதுபோன்ற மக்கள் விரோத ஆட்சிதான் தற்போது தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கின்றது.
திராவிட மாடல் ஆட்சி நடத்துகிறோம் என்று ஸ்டாலின் கூறிக் கொண்டிருக்கின்றார். எந்த காலத்திலும் என் குடும்ப உறுப்பினர்களோ, என் மகனோ அரசியலுக்கு வரமாட்டார் என்று ஸ்டாலின் கூறிவிட்டு உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்கியதுதான் திராவிட மாடல் ஆட்சி. . தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சினிமா தியேட்டர்களும் உதயநிதி ஸ்டாலின் கையில் உள்ளது. அவர் நினைத்தால் தான் எந்த படத்தையும் திரையிட முடியும். ஒட்டுமொத்த சினிமா துறையும் உதயநிதி தன்வசம் வைத்துள்ளார். விஜய் படமான வாரிசு ஸ்டாலின் வாரிசு நினைத்தால் தான் வரும் என்ற சூழ்நிலையிலேயே தமிழகம் உள்ளது.
இந்த 19 மாத திமுக ஆட்சி தமிழகத்தை 20 ஆண்டுகாலம் பின்னோக்கி தள்ளிவிட்டது. விடியல் ஆட்சி தருகின்றேன் என்று சொன்ன ஸ்டாலின் தனது குடும்பத்தினருக்கு மட்டுமே விடியலை தந்து கொண்டிருக்கின்றார்.
மக்களை ஏமாற்றுகின்ற, வஞ்சிக்கின்ற, மக்கள் நலனை புறந்தள்ளுகின்ற ஆட்சிதான் தமிழகத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இது விரைவில் தூக்கி எறியப்பட வேண்டிய ஆட்சி. அடுத்து நாடாளுமன்ற தேர்தல் வந்தாலும், சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் அதிமுகவிற்கு அதிக வாக்குகளை பெற்றுத் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.


No comments:
Post a Comment