கடலூர் பகுதியில் 300க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் நேற்று வீசிய சூறைக் காற்றில் முறிந்து விழுந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில்,கடந்த 2 தினங்களாக மாலையில் இடி, மின்னலுடன், சூறைக்காற்றுடன் பலத்த மழையும் பெய்து வருகிறது. இந்த நிலையில், நேற்று இரவு கடலூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது. அதே நேரத்தில் கடலூர் அருகே உள்ள மலைக் கிராமங்களில் சூறாவளிக் காற்று வீசியது.
இதில் ராமபுரம், அன்னவல்லி, வி.காட்டுப்பாளையம், வெள்ளைகரை, கொடுக்கன் பாளையம், ஒதியடிக்குப்பம் உள்ளிட்டப் பகுதிகளில் விவசாயிகள் 300க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிட்டிருந்த வாழை மரம் முறிந்து விழுந்தன.
இதனால் விவசாயிகள் கவலையடைந்தனர். இதுபற்றி அப்பகுதி விவசாயிகள் கூறுகையில்,ஒரு ஏக்கர் வாழை பயிரிடுவதற்கு குறைந்தது ரூ.1.5 லட்சம் வரை செலவாகிறது.நேற்று பலத்த சூறைக் காற்று வீசியதால் வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. இதில் வாழைத்தார்கள், வாழைப் பிஞ்சுகள் உள்ளிட்ட அனைத்தும் சேதமானது. இந்தப் பாதிப்பில் ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் சுமார் 1 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் விவசாயிகள் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளோம். இதற்கு தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் முறிந்து விழுந்து சேதமான வாழை மரங்களை நேரில் பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.


No comments:
Post a Comment