கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே சேத்தியாத்தோப்பு மேட்டுத் தெருவில் ஸ்ரீ மகாகாளி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் ஸ்ரீ மகாகாளியம்மன் பூங்கரகமாக வடிவெடுத்து பக்தர்களுக்கு அருளாசிகளை வழங்கி வருகிறார். இந்நிலையில் இந்த ஆலயத்தின் விழாவானது இரண்டு தினங்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் துவங்கி பல்வேறு பூஜைகள், சுவாமி பூங்கரகமாக வடிவெடுத்து வீதி உலா என நடைபெற்று வந்தது. இந்நிலையில் விழா நிறைவாக மஞ்சள் நீரெடுத்து பக்தர்கள் வரவேற்க, அம்மன் பூங் கரக ஊர்வலமாக வீதிகளில் வலம் வந்தார். பம்பை, தப்பாட்டம், மேளதாளங்கள் முழங்க துள்ளல் இசையுடன் பக்தர்களுக்கு அருளாசிகளை வழங்கினார். அப்போது அம்மனுக்கு வேண்டுதலுக்காக விடப்பட்ட சேவல்கள் பலியிடப்பட்டு துள்ளல் ஆட்டத்துடன் குடியிருப்புகள், கடைத்தெரு உள்ளிட்ட அனைத்து இடங்களுக்கும் பூங்கரகம் சுமந்து அம்மன் வீதி உலாவில் காட்சியளித்தபோது ஸ்ரீ மகாகாளியம்மனுக்கு மஞ்சள் நீர் ஊற்றி பாதங்களில் பூஜைகள் செய்து பக்தர்கள் வணங்கினர். இந்த ஸ்ரீ மகாகாளி அம்மன் பூங்கரக ஊர்வலத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்த பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனின் துள்ளல் ஆட்டத்தைக் கண்டு மனமுருகி வேண்டுதலோடு வணங்கினர்.

No comments:
Post a Comment