கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை - முட்லூர் சாலையில் இன்று அரசுப் பேருந்து ஒன்று வாய்க்காலில் இறங்கி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரத்தில் இருந்து பரங்கிப்பேட்டை நோக்கி அரசு நகரப் பேருந்து ஒன்று பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது. பேருந்து பரங்கிப்பேட்டை - முட்லூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக திடீரென பேருந்தின் குறுக்கே வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த பேருந்து ஓட்டுநர், லாரி மீது நேருக்கு நேர் மோதாமல் பேருந்தை இடதுபுறமாக திருப்பியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரம் இருந்த வாய்க்காலுக்குள் இறங்கியது.
விபத்து நடந்தவுடன், அருகில் இருந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் உடனடியாக ஓடிவந்து பேருந்தின் கண்ணாடிகள் மற்றும் அவசரக் கதவு வழியாக பயணிகளைப் பத்திரமாக மீட்டனர். நல்வாய்ப்பாக இந்த விபத்தில் பயணிகளுக்குப் பெரும் காயங்கள் உயிர் சேதம் ஏதுமின்றி அனைவரும் உயிர் தப்பினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், விபத்துக்குள்ளான பேருந்தை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், விபத்திற்குக் காரணமான லாரி குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment