கடலூர் மாவட்டம் விருதாச்சலம் நகராட்சி 16வது நகரமன்ற உறுப்பினர் தீபாமாரி முத்து இவர் பல ஆண்டுகளாக இட்லி வியாபாரம் செய்து வந்த நிலையில் அவருக்கு நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் வாய்ப்பு அளிக்கப்பட்டு அவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரது கணவர் கூலி வேலை செய்து வருபவர், இவர்கள் இருவரும் தற்போது தாங்கள் சேமித்து வைத்த பணத்தை கொண்டு மக்களிடத்தில் தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறார்.
நகராட்சியில் கவுன்சிலராக பணியாற்றி வரும் இப்பெண் தனது 16வது வார்டில் தூய்மையாக வைத்திருக்கும் ஒரு நபருக்கு 3 மாதத்திற்கு ஒருமுறை குலுக்கல் முறையில் தங்க நாணயம் பரிசாக வழங்குவதாக அறிவித்த துண்டு பிரசுரம் வழங்கி வரும் செயல் பொதுமக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
சாதாரண கூலி வேலையில் இருந்து கவுன்சிலராக பொறுப்பேற்ற பிறகும் பசியாற உணவு அளித்து அதிலிருந்து பெற்ற காசை மக்களுக்கு செலவு செய்ய வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு மக்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் மேலோங்கச் செய்வதற்காக இத்தகைய திட்டத்தை அறிவித்து இருப்பதாக கவுன்சிலர் தெரிவித்தார்.
மேலும் இதுபோன்ற செயலின் காரணமாக நகரப்பகுதியில் உள்ள வார்டு மக்கள் தங்களுடைய பகுதியை சுத்தமாக வைத்திருப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி குப்பைகளை குப்பைத் தொட்டியில் கொட்டுவது, சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருப்பது என்ற இந்த நோக்கம் அனைவரிடத்திலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

No comments:
Post a Comment