கடலூர் செம்மண்டலம் பகுதியில் பச்சையப்பா அறக்கட்டளையின் கீழ் கந்தசாமி நாயுடு நினைவு மகளிர் கலைக்கல்லூரி உள்ளது. இங்கு காலை மற்றும் மாலை நேரங்களில் வகுப்புகள் நடைபெறுகிறது.
இந்த கல்லூரியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இன்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு மாணவிகள் வந்தனர். கழிவறைக்கு சென்றபோது அங்கு ஒரு மாணவி துப்பட்டாவால் தூக்குப்போட்டு பிணமாக தொங்கினார்.
இதனை பார்த்ததும் மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்த தகவல் கல்லூரி வளாகத்தில் காட்டுத்தீ போல பரவியது. இதுபற்றி கடலூர் புதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து போலீசார் அங்கு விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
விசாரணையில் அந்த மாணவியின் பெயர் தனலட்சுமி (வயது 19), பி.காம்.முதலாமாண்டு படித்து வந்தது தெரியவந்தது. இவர் விழுப்புரம் அருகே உள்ள சின்னபாபு சமுத்திரம் கிராமத்தை சேர்ந்த நாகலிங்கம் என்பவரின் மகள் ஆவார். இவர் விடுதியில் தங்கி கல்லூரியில் படித்துக் வந்தார்.
இவர் கைப்பட எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
தம்பி சத்தி நல்லா படிடா, அப்பா அம்மாவ பாத்துக் கோயாரையும் நம்பாதிங்க, இது போலியான உலகம், நான் தேர்வில் தோல்வி அடைந்துவிடுவேனோ என பயமா இருக்கு, நான் இறந்துவிட்டால் என்னுடைய.என்.சி.சி.யூனிபாமை எனக்கு போடுங்க, எனது அக்கவுண்டில் ரூ.6 ஆயிரம் இருக்கு அதில் வாட்ச் வாங்கிக்கங்க, அப்பா, அம்மாவ எதிர்த்து பேசக்கூடாது.இந்த கடிதத்தை படித்துவிட்டு கிழித்து போட்டுவிடுங்க.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் கல்லூரி மாணவி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து புதுநகர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.

No comments:
Post a Comment