வேப்பூர் தாரா மெடிக்கலில் இறந்த குழந்தைக்கு தவறான சிகிச்சை அளித்த போலி மருத்துவருக்கு போலீசார் வலைவீச்சு.
கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த பூலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் மகள் ரட்சிதா (வயது 5) இவருக்கு உடல்நிலை சரியில்லாததால், கடந்த 7ம் தேதி வேப்பூர் தாரா கிளினிக்கிற்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு பணியில் இருந்த அவருக்கு சத்தியசீலன் என்பவர் சிகிச்சை அளித்தார்.
அன்று பகல் ரட்சிதா மயக்கமடைந்ததை தொடர்ந்து, வேப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த அரசு மருத்துவர் ரட்சிதா இறந்து விட்டதாக கூறினார்.
இதனால் சந்தேகமடைந்த நல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் தமிழரசன், கடந்த 9ம் தேதி தாரா மெடிக்கலில் உள்ள கிளினிக்கிற்கு விசாரணைக்கு சென்ற போது அங்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்த சத்தியசீலன் தப்பி ஓடினார்.
இந்நிலையில், வேப்பூர் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் செந்தில்குமார், வேப்பூர் போலீசாரிடம் புகார் அளித்தார். அதில், வேப்பூர் அடுத்த பூலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த ரட்சிதாவிற்கு அளித்த தவறான சிகிச்சையால் குழந்தை இறந்தது தெரிய வந்தது.
அவருக்கு சிகிச்சை அளித்த சத்தியசீலன் போலி மருத்துவர் என்பது விசாரணையில் தெரிய வந்தது, இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து போலி மருத்துவர் சத்தியசீலனை தேடி வருகின்றனர்.

No comments:
Post a Comment